Sunday, November 24, 2013

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகைகள்

உலகளவில் சர்க்கரை நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு ஐந்தாவது இந்தியக் குடிமகனும் ஒரு சர்க்கரை நோயாளி என்னும் அளவிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியா உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. `

`நீரழிவு'', ``மதுமோகம்'' என்ற பெயர்களால் இந்நோய் நெடுங்காலமாய் நம் மருத்துவத்தில் அறியப்பட்டுள்ளது. ஒரு நோயாளியின் சிறுநீரைத் தரையில் விட்டு அவ்விடத்தில் எறும்புகள் ஈர்க்கப்படுவதனை வைத்து இந்நோயை நம் முன்னோர்கள் கணித்தனர்.

2012-ம் ஆண்டு உலக சர்க்கரை நோயாளிகள் கூட்டமைப்பின் அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் 6.3 கோடி மக்கள் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தவிர தமக்கு சர்க்கரை நோய் இருப்பதை அறியாமலே வாழ்ந்து வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயைப்பற்றிய விழிப்புணர்வும், அறிவும் மக்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. இதன் காரணமாகவே ``உலக சர்க்கரை நோய் தினம்'' ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம்நாள் அனுசரிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு நோயல்ல.

அது உடலில் கரியமில பதார்த்தங்களின் வளர்சிதை மாற்றத்தில் தோன்றும் ஒருசிறு மாறுபாடேயாகும். இது உலக சுகாதார நிறுவனத்தால் அறியப்பட்டுள்ள ஒருவருக்கொருவர் பரவாத நான்கு நோய்களுள் முக்கியமானதாகும்.

இந்நோய் நாள்பட்ட, எளிதில் குணப்படுத்த இயலாத, அதிக செலவாகும், ஆனால் எளிதில் தடுக்கப்படக் கூடிய நோயாகும். இந்நோய் பாதிப்புக்கு உள்ளானோர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டும், உடலளவில் சோர்வுற்றும் தங்கள் செயல்திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கின்றனர்.

இதனால் ஏற்படக்கூடிய தனிமனித உற்பத்தி திறன் குடும்பத்தை வெகுவாகப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தையும், நாட்டையும் ஏன் உலகத்தையும் வெகுவாக பாதிக்கிறது.

சர்க்கரை நோய் வரும் வழிகள்:

கணையத்திலுள்ள `பி' செல்களில் இருந்து சுரக்கும் இன்சுலின் அளவு குறைவதாலும் அல்லது அந்த இன்சுலினுக்கு செல்கள் இன்சென்டிவ் ஆக இருப்பதாலும் அல்லது மேற்சொன்ன இரண்டு காரணிகளாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.

சர்க்கரை நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

40 வயதைக் கடந்த ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு முறையேனும் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவினைப் பரிசோதித்துக் கொள்வது அவசியம். அப்போதுதான் ஆரம்ப கட்டத்திலேயே நோய் இருப்பதைக் கண்டறிந்து தக்க மருந்துகள், உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் தேவையான உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் வேறு பாதிப்புகளின்றி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இயலும்.

இத்தகைய பரிசோதனைகளின் மூலம் சர்க்கரை நோயைக் கணிப்பது மட்டுமல்லாமல் உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற் பயிற்சியின் மூலமே இந்நோயினைத் தடுத்துவிட முடியும்.

ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால் அவர் மேற்கொள்ள வேண்டியவை:

முதலில் சொன்னபடியே இது ஒரு நோயல்ல வளர்ச்சிதை மாற்றத்தில் தோன்றக் கூடிய மாறுபாடே ஆகும். எனவே தான் ஒரு நோயாளி என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். மனச்சோர்வில் இருந்து முற்றிலும் தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் மனச்சோர்வே நோயின் தீவிரத்தை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே மனக்கவலையில் இருந்து முற்றிலும் விடுபடுங்கள். உங்களால் நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாக வாழமுடியும். உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் இன்றியமையாத, தவிர்க்கக் கூடாத ஒவ்வொரு நாளும் அயர்ப்பின்றி (சலிப்பின்றி) கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும்.

மாலை முழுவதும் விளையாட்டு என்று கூறினாலும் ஒவ்வொரு வரும் அதிகாலையில் எழுவதும் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் நடை பயில்வதும் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். ஏனைய தீவிரமான உடற்பயிற்சிகளை விட நடைபயிற்சி அனைத்து வயதினருக்கும் எத்தகைய உடல்நிலையில் இருந்தாலும் எளிதில் கடைப்பிடிக்க ஏற்றதாகும்.

சோர்வுறாமல் அதிகாலையில் எழுந்து தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் எமனை நீங்கள் ஓடஓட விரட்டலாம். நடைபயிற்சி மேற்கொள்ளும்போது தக்க காலணிகளை உபயோகிக்கவும். முதலில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்க ஆரம்பித்து பின்பு வேகத்தை கூட்டலாம்.

பின்பு வேகத்தைக் குறைத்து மெதுவாக நடந்து உடற்பயிற்சியை முடிக்கவும். எப்போதும் தக்க மருத்துவ ஆலோசனை பெற்று உடற்பயிற்சி மேற்கொள்வது நலம். அதிக உடற்பயிற்சியால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வெகுவாகக் குறைவதும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் இந்நிலை ஏற்படுமாயின் உடனடியாக குளுக்கோஸ் எடுப்பது அவசியமாகும்.

இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா மற்றும் சித்த மருத்துவத்தில் இது மேக நோய்களுள் ஒன்றாகக் கூறப்படுகிறது. நோய் வரும் வழிகளுள் ஒன்றாக `கன்னி மயக்கத்தால் கண்டிடும் மேகமே' என சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கான மூலிகைகள் அடங்கிய பல்வேறு மருந்துகள் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் இந்நோய்க்காக வழங்கிய மருந்துகள் யாவும் இன்றைய நவீன முறைகளால் பரிசோதிக்கப்பட்டு அவை எவ்வாறு உடலில் சர்க்கரை நோயின் அளவை சீரான நிலையில் வைப்பதோடு மட்டுமல்லாமல் உடலை வலுப்படுத்தவும் உதவுகின்றன என்பதையும் உணர முடிகிறது.

எடுத்துக்காட்டாக, சர்க்கரை கொல்லி என்னும் மூலிகை எவ்வாறு சர்க்கரையின் அளவை சீராக்குகிறது என்பதைக் காணலாம். சர்க்கரைக் கொல்லையில் அதிமுக்கியமாக செயல்படுபவை அதிலுள்ள ஜிம்னெமிக் ஆசிட் ஆகும். இது கணையத்திலுள்ள `பி' செல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து இம்மூலிகையை எடுப்பதன் மூலம் மற்ற மருந்துகளைக் குறைக்க உதவும். மேலும், நாவல், சீந்தில், வில்வம் போன்ற மூலிகைகள் கார்போஹைட்ரேட் செரிமானத்தை தாமதப்படுத்துவதன் மூலம் குளுக்கோஸ் உருவாவதைக் குறைக்கிறது.

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் வெந்தயம் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைச் சீராக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் ரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் அளவையும் குறைக்க உதவுகிறது. அதிலுள்ள கரையக் கூடிய நார்ச்சத்தானது உணவிற்குப் பின் எடுக்கும் ரத்தத்தின் குளுக்கோஸ் அளவைக் குறைக்க உதவுகிறது.

மேலும், பெரும்பாலான சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வழங்கும் மூலிகைகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இத்தகைய மூலிகைகள் எவ்விதமான பக்க விளைவுகள் இன்றி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் சர்க்கரை நோயினால் வரும் ஏனைய உடல் உபாதைகளையும் தவிர்க்க உதவுகின்றன. எனவே மூலிகை மருந்துகளின் மூலமாகவே சர்க்கரை நோயை எளிதில் எதிர்கொள்வதுடன் ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...