Sunday, November 24, 2013

நெஞ்சு எரிச்சலை அலட்சியப்படுத்த வேண்டாம்!

`ஜீரணம்' அதாவது `செரித்தல்' முதலில் வாயில் தான் ஆரம்பிக்கிறது. சாப்பாட்டின் மணம், நம் மூக்கில் பட்டவுடனேயே, வாயைச் சுற்றியுள்ள உமிழ்நீர் சுரப்பிகள் தூண்டப்பட்டு, உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது. இதைத்தான் சாப்பாட்டைப் பார்த்தவுடனேயே, வாயில் எச்சில் ஊறுகிறது என்று சொல்வதுண்டு.

ஒருமுறை என் நடிக நண்பர் ஒருவர் என்னிடம் , ``ரோட்டில் காரில் போகும்போது, ஹோட்டலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் போர்டிலுள்ள, சாப்பாட்டு அயிட்டங்களின் பெயர்களைப் படித்தாலே, எனக்கு நாக்கில், எச்சில் இஷ்டத்துக்கு ஊற ஆரம்பித்து விடுகிறது. அதற்கு மேல் என்னால் வண்டியை ஓட்ட முடியலை'' என்றார். அவர் சொன்னது உண்மை தான். தனக்குப் பிடித்த சாப்பாட்டை நினைத்தாலும் சரி, பார்த்தாலும் சரி, வாயிலுள்ள எச்சில் சுரப்பிகள் தானாகவே, உமிழ்நீரை சுரக்க ஆரம்பித்து விடும். உமிழ்நீரில் நோய் எதிர்ப்புச் சக்தி நிரம்பிய பொருட்களும், ஜீரணத்துக்கு உபயோகப்படக்கூடிய என்ஸைம்களும் நிறைய இருக்கின்றன. நாம் சாப்பிடும் உணவு, கண்ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துகள்களாக ஆவதற்கு, இந்த உமிழ்நீர் என்ஸைம்கள் பெரிதும் உதவுகின்றன.

அதோடு, உணவை உருண்டை, உருண்டையாக விழுங்குவதற்கு சுலபமாக ஆக்குவதற்கு, உமிழ்நீர் பெரிதும் உதவுகின்றன. உமிழ்நீர், நாக்கு, பற்கள் ஆகியவை எல்லாம் ஒன்று சேரும்போது நாம் வாயில் போடும் உணவை, உருண்டையாக்கி, தொண்டைக்கு உள்ளே தள்ளி, விழுங்குவதற்கு சுலபமாக்கிக் கொடுக்கிறது.

உமிழ்நீருடன் சேர்ந்து வாயில் அரைக்கப்பட்ட உணவு, நாம் விழுங்கும்போது, தொண்டை வழியாக, உணவுக் குழாயின் முதல் பாகத்திற்கு இறங்குகிறது. நம் எல்லோருக்குமே, வாயில் போடப்படும் உணவு, வாயில் நன்றாக மெல்லப்படுவது மட்டும் தான் தெரியும். ஆனால் வாய்க்குள்ளிருந்து தொண்டைக்கு எப்படி இறங்குகிறது? அதற்குப் பிறகு உணவு, எங்கே எப்படி போகிறது என்பது தெரியாது.

தொண்டைக்குள்ளே, முன்பக்கத்தில், காற்றுக்குழாயின் வாசலும், பின்பக்கத்தில் உணவுக்குழாயின் வாசலும் இருக்கின்றது. காற்றுக்குழாய் நெஞ்சிலுள்ள நுரையீரலில் போய் முடிகிறது. உணவுக்குழாய் வயிற்றிலுள்ள இரைப்பையில் போய் முடிகிறது. நாம் உண்ணும் உணவு, தொண்டை வழியாக உணவுக்குழாயில் கீழே இறங்கும் போது, காற்றுக்குழாயின் வாசல் பகுதியும், மூக்கின் பின்பகுதியும் தானாகவே மூடிக் கொள்ளும்.

இது எதற்கு என்றால், தொண்டை வழியாக இறங்கும் உணவு, உணவுக்குழாய்க்குள் தான் போக வேண்டுமே தவிர, காற்றுக் குழாய்க்குள் போய்விடக்கூடாது. அது ஆபத்து, அப்படி தவறி, ஒருவேளை உணவு காற்றுக்குழாய்க்குள் போனால், நமக்கு புரை ஏறி, தும்மல் எடுத்து, உடனே அந்த உணவுத் துண்டு வெளியே வந்தாக வேண்டும்.

அந்த சிறு உணவுத் துண்டு வெளியே வரும் வரை, தும்மல் எடுத்து, உண்டு, இல்லை என்று ஆக்கி எப்படியாவது வெளியே தள்ளி விடும். எனவே நாம் சாப்பிடும் உணவு, காற்றுக் குழாய்க்குள் போய்விடக்கூடாது என்பதற்காக, இயற்கையாகவே, காற்று வழி மூடப்பட்டு, உணவு வழி திறக்கப்படுகிறது. இதனால்தான் சாப்பிடும் போது பேசக்கூடாது என்று பெரியோர்கள் சொல்வதுண்டு.

விஞ்ஞான ரீதியாக அவர்கள் சொல்வது சரிதான். தொண்டையில் இருந்து, உணவுக்குழாய்க்குள் இறங்கிய உணவு, நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக்குழாய் வழியாக இரைப்பையை வந்து சேருகிறது. நெஞ்சுப்பகுதி உணவுக்குழாய், உருண்டையாக, நீளமாக, ஒரு பைப் போன்று சுமார் பத்து அங்குலம் நீளம் இருக்கும்.

நெஞ்சுப்பகுதி உணவுக்குழாய், அலை அடிப்பது போல், வரிசையாக, சுருங்கி விரிவதனால் தான் தொண்டையிலிருந்து உணவு இரைப்பைக்கு இறங்க முடிகிறது. நெஞ்சுப்பகுதியிலுள்ள உணவுக்குழாய், இரைப்பையில் வந்து சேருமிடத்தில், ஒரு வால்வு இருக்கிறது. இரைப்பைக்கு வந்த உணவு, மறுபடியும் மேலே வராமல் இருக்க, இந்த வால்வு பார்த்துக்கொள்கிறது.

அதாவது உணவு மேலேயிருந்து கீழே இறங்கத்தான் இந்த `வால்வு' அனுமதிக்குமே தவிர, கீழே வந்த உணவு மறுபடியும் மேலே போக, இந்த வால்வு அனுமதிக்காது. ``சாப்பிட்ட உணவு, வயிற்றிலிருந்து நெஞ்சு வரைக்கு வந்து போகுது, நெஞ்சு கரிக்குது, நெஞ்சு எரியுது' என்று சிலபேர் சொல்வார்கள். இரைப்பைக்கு வந்த உணவு, மறுபடியும் மேலே வருவதனால் தான், இந்த மாதிரி ஏற்படுகிறது.

இந்த வால்வு, சரியாக வேலை பார்க்காவிட்டால், இரைப்பைக்கு வந்த உணவு, மறுபடியும் மேலே வரலாம். இதைத்தான் நெஞ்சு கரிக்குது, நெஞ்சு எரியுது என்று சொல்வார்கள். இருதயத்தில் ஏற்படும் நெஞ்சு வலியிலும், நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதுண்டு. சிலபேர் இந்த நெஞ்செரிச்சலை, உணவுப் பாதையில் ஏற்படும் நெஞ்செரிச்சல்தான் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு, அதற்கான முதலுதவியைச் செய்யாமல், மெத்தனமாக இருப்பார்கள்.

இது தவறு. நெஞ்செரிச்சல் எதனால் ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள, உடனே பக்கத்திலுள்ள டாக்டரிடம் செல்வது தான் நல்லது. நெஞ்சுப்பகுதியில், நடுவில், விலா எலும்புகள் முடியுமிடத்தில், ஒரு சிறிய குழி போன்று பள்ளம் இருக்கும். இதை `நெஞ்சுக்குழி' என்று கூட நாம் சொல்வோம். இந்த நெஞ்சுக்குழிக்கு நேராக, உள்ளேதான், இரைப்பை இருக்கிறது.

மிகக்கனமான, மிக ஸ்ட்ராங்கான தசைச்சுவர்களால் ஆனதுதான் இரைப்பை. இது ஒரு தசைப்பை. வயிற்றிலுள்ள உணவுப்பாதையின் முதல் பகுதிதான், இரைப்பை. இந்த பையில் தான் நாம் சாப்பிடும் உணவு, உருண்டை உருண்டையாக வந்து விழும். இரைப்பை மிகச்சிறிதாகவும், மிகப் பெரிதாகவும், சுருங்கி விரியும் தன்மை படைத்தது. இரைப்பையிலுள்ள உணவின் அளவைப் பொறுத்து, இரைப்பை பெரிதாகவும், சிறிதாகவும் ஆகும்.

கொஞ்சம் உணவு சாப்பிட்டால், கொஞ்சமாகவும், அதிக உணவு சாப்பிட்டால் அதிகமாகவும், இரைப்பைவிரியும். இரைப்பை சுத்தமாக காலியாக இருக்கும்போது, சுமார் ஐம்பது மி.லி. கொள்ளளவே உள்ளதாக இருக்கும். ஆனால் சாதாரணமாக ஒரு லிட்டர் உணவை வைத்துக் கொள்ளக்கூடியது இரைப்பை. சில நேரங்களில் சுமார் மூன்று லிட்டர் உணவைக் கூட தாங்கக்கூடிய சக்தி இரைப்பைக்கு உண்டு.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...