Friday, June 27, 2014

ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் பூண்டு

நம் அன்றாட உணவில் தவறாமல் இடம் பெறுகின்ற ஒரு பொருள் பூண்டு ஆகும். பூண்டும், இஞ்சியும் சேரும் போது பெரும் மணத்தையும், சுவையையும் உணவுக்கு தருகிறது. மேலும் உணவாகின்ற பூண்டு இன்றைய நவநாகரீக உலகில் மானுடத்தை தாக்குகின்ற பல நோய்களுக்கு மருந்தாகி பயனளிக்கிறது.

பூண்டு மத்திய ஆசியாவை பிறப்பிடமாக கொண்டது என்பர். அல்லியம் சேட்டிவம் என்பது இதனது தாவர பெயர். ஆங்கிலத்தில் இதை கார்லிக் என்று அழைப்பர். சித்த, ஆயுர் வேத நூல்களில் பூண்டின் மருத்துவ குணங்களை பற்றி சொல்லுகின்ற போது, பூண்டு உடலை வளர்க்க கூடியது. விந்து வளர்ச்சிக்கு ஏற்றது. தாய்ப்பாலை பெருக்க கூடியது. செரிமானத்தை தூண்டக் கூடியது. எண்ணெய் பசையும், உஷ்ணத் தன்மையும் கொண்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மருந்துக்கு புதியதாக விளைந்த பூண்டே பலன் தரக்கூடியது என்பர். பூண்டை உபயோகப் படுத்தும் போது சில விதிமுறைகளை மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

அதாவது, உடற்பயிற்சி செய்த உடனேயோ அல்லது வெயிலில் அலைந்து திரிந்து இல்லம் வந்த உடனே அல்லது கடும் கோபம் கொண்டிருக்கும் போதோ பூண்டை உண்ணுவதை தவிர்க்க வேண்டும் என்று ஆயுர்வேதம் எச்சரிக்கிறது. ஏனெனில் மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளிலும் உடலின் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.

அந்த சமயத்தில் பூண்டை உணவாக சேர்ப்பதால் மேலும் உடலின் வெப்பநிலை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு நேரும் என்பதே காணரமாகும். பூண்டு ஒரு நோய் தணிச்சி (ஆன்டி பயாடிக்), பலமான கிருமி நாசினி (பேக்டிரியோ ஸ்டேட்டிக்), பூஞ்சை காளான் கொல்லி (ஃபங்கிசைட்), வயிற்றுப் புழுக் கொல்லி (ஆன்த் எல்மின்திக்),

ரத்த நாள அழற்சியை தடுப்பது (ஆன்டி த்ராம்பிக்), ரத்த அழுத்தத்தை குறைப்பது (ஐப்போ டென்சிவ்), ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கக் கூடியது (ஐப்போகிளை சிமிக்), ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்கக் கூடியது (ஐப்போ கொலஸ்டிரோலமிக்), மேல் சுவாச அறைக் கோளாறுகளைக் கண்டிக்கக் கூடியது (யு.ஆர்.டி.ஐ.), முதுமை காரணமாக ஏற்படும் ரத்த நாள அழற்சி,

அடைப்பு ஆகியவற்றைக் தடுக்க கூடியது (ஏஜ் டிபென்டன்ட் வேஸ்குலார் சேஞ்சஸ்), நுண்கிருமிகளை அழிக்க வல்லது (ஆன்டி மைக்ரோபியல்), மூத்திர வர்த்தினி (டையூரிடிக்), சளியைக் கரைக்ககூடியது (எக்ஸ்பெக்டோரண்ட்) என மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

அறுவை சிகிச்சைக்கு முன்பு சில நாட்கள் பூண்டை தவிர்ப்பது நல்லது. இது இரத்தம் உரைகின்ற நேரத்தை அதிகப்படுத்தும் (களாட்டிங்டைம்) அல்லது ப்ளேட்லெட் சேர்மானத்தைக் குறைக்கும் (ப்ளேட்லெட் அக்ரிகேஷன்).

இதனால் காயம் குணமாகத் தாமதம் ஆகும், இரத்த சேதாரமும் ஆகும். பூண்டைமேல் பூச்சாகப் பயன்படுத்தும் போது தோலில் எரிச்சல் கண்டால் உடனே கழுவிவிடவும் இல்லையேல் கொப்புளங்கள் தோன்றும்.

• ஐந்து முதல் பத்து திரி வரையில் பூண்டைத் தோல் உரித்து எடுத்து பாலில் வேக வைத்து நெய்யும் சர்க்கரையும் போதிய அளவு சேர்த்துப் பிசைந்து உள்ளுக்கு சாப்பிட சீதக்கழிச்சல் (டிசன்ட்டரி) குணமாகும்.

• ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் இரண்டுதிரி பூண்டை நசுக்கிச் சேர்த்து காதில் ஓரிரு சொட்டுகள் விட்டு வர விரைவில் காது வலி, காதில் சீழ் வடிதல் ஆகியன குணமாகும்.

• பூண்டை உரித்து சிலதிரிகளோடு கொஞ்சம் உப்பு சேர்த்துக் குழைத்து மேலுக்குப் பூச சுளுக்கும் அதனால் ஏற்படும் கடும் வலியும் குணமாகும்.

• பூண்டை அரைத்து சிறிய கட்டிகளின்மேல் பூசிவர கட்டிகள் விரைவில் கரையும் அல்லது உடைந்து அதன் நச்சுக்கள் வெளியேறும்.

• பூண்டுச் சாறு தயாரித்து அதில் தினம் 20 முதல் 30 துளி வரை அந்தி சந்தி என இருவேளை சாப்பிட்டுவர விரைவில் இருமல், இரைப்பு என்கிற மேல்மூச்சு, ஆஸ்த்துமா என்கிற மூச்சு முட்டல் ஆகியன குணமாகும்.

• பூண்டை நசுக்கி அதன் சாற்றை எடுத்து உடலில் ஏற்படும் படைகள் (ரிங்வார்ம்) மீது கழுவியபின் போட்டு வர சிலநாட்களில் படை, தேமல் முதலியன குணமாகும்.

• பூண்டைப் பால் ஆவியில் இட்டு வேக வைத்து எடுத்துக் கடைந்து அத்தோடு பனைவெல்லமும் தேனும் சிறிதளவு சுக்குத் தூளும் சேர்த்து லேகியம் போல் செய்து வைத்துக்கொண்டு அந்தி சந்தி என தினம் இருவேலை உண்டுவர வயிற்றைப் பெருக்க வைக்கும் வாயு வெளியேறும், வயிற்று வலியும் குணமாகும்.

• பூண்டை நசுக்கிச் சாறெடுத்து 20-30- துளிகள் வரை சர்க்கரை சேர்த்துக் கொடுக்க இருமல், சுவாச காசம், காதுவலி, குளிர் சுரம் ஆகியன குணமாகும்.

• சிறுநீர்சரிவர இறங்காமல் அடிவயிறு பெருக்கும் போது பூண்டை நசுக்கி நீர்விட்டுக் கிளறி அடிவயிற்றில் வைத்துக்கட்ட சிறுநீர் வெளியேறி சுகம் சேறும். கடும் காய்ச்சல் (சுரம்), அம்மை இவை கண்டபோது தூக்கம் கெடுவதோடு வாய் பிதற்றல் காணும் அந்நிலையில் பூண்டை நசுக்கி உள்ளங் காலில் வைத்துக்கட்ட பிதற்றல் குறைந்து சுகமான நித்திரை உண்டாகும்.

• பூண்டைச் சாறு எடுத்து சிறிது நீருடன் சேர்த்து சீழ்பிடித்த இரணங்களைக் கழுவிவர விரைவில் புண்கள் ஆறும். பூண்டுச் சாற்றை விரலில் தொட்டு உள் நாக்கு வளர்ச்சி கண்டபோது மேலே தடவிவர வீக்கம் சுருங்கி வலியும் தணியும்.

*இதய நோய்கள், பக்க சூலை, குன்மம், சுவையின்மை, சடராக்கினி குறைவு ஆகிய வற்றையும் குணமாக்கும்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...