Tuesday, December 24, 2013

குழந்தைகளை தாக்கும் பல் நோய்கள்

மனிதன் முக அழகில் மட்டும் அல்ல உடல் நலத்திலும் முக்கிய பங்கு வகிப்பது பற்கள். சிலருக்கு பற்கள் முன்பக்கமாக நீண்டும், வரிசையாக இல்லாமலும் இருக்கும். இதன் காரணமாக அவர்களது முக அழகு சிதைந்து விடும். இதனால் ஏராளமானோர் தன்னம்பிக்கை இழந்து வாழ்வில் எதையும் சாதிக்க முடியாதவர்களாக மாறி விடுகிறார்கள்.

பற்களின் அழகு சிதைந்து போவதற்கு குழந்தை பருவத்தில் அதை முறையாக கவனித்து பராமரிக்காதது தான் காரணம். குழந்தை பருவத்தில் இருந்தே பல் குழந்தை நல மருத்துவ நிபுணரிடம் குழந்தைகளை காண்பித்தால், பற்களின் ஆரோக்கியம், அழகு கெடாமலும், பல் சிதையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிறார் குழந்தைகள் பல் மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் சரவணகுமார்.

ஒரு குழந்தையின் பல் வரிசை சரி இல்லாமல் போனால் முக அழகு சிதைந்து விடும். பற்கள் நன்றாக இருந்தால் தான் முகம் அழகுடன் பளிச்சிடும். பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்து விட்டால் அவர்களால் தெளிவாக பேசமுடியாது. இதனால் தன்னம்பிக்கை இழந்து விடுவார்கள்.

குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்து விட்டாலும் கூட அவர்களால் உணவை நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அடிக்கடி அஜீரண கோளாறு ஏற்படும். குழந்தையின் சிரிப்பிலும் பல் முக்கிய பங்கு வகிக்கிறது. பல் இல்லாத குழந்தையின் சிரிப்பு அதன் அழகை சிதைத்து விடும்.

பல் முளைக்கும் காலம்........

குழந்தைக்கு 6 முதல் 7-ம் மாதத்திற்குள் பல் முளைக்க தொடங்கும். 19-வது மாதத்தில் 20 பற்கள் முளைத்து விடும். பல் முளைக்கும் கால கட்டத்தில் தான் குழந்தை கண்ட கண்ட பொருட்களையும் எடுத்து வாயில் வைத்து கடிக்கும். இதனால் நோய் தொற்றி காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படலாம்.

இதனால் பெற்றோர் அந்த சமயத்தில் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இல்லா விட்டால் கிருமித்தொற்றால் பல்வேறு நோய்களின் பிடியில் குழந்தை சிக்க நேரிடும். குழந்தையின் பல் விஷயத்தில் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

குழந்தைக்கு சாக்லெட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடும் போது அதில் உள்ள இனிப்பு வாயில் ஒட்டிக் கொண்டால் பல் சொத்தையாகி விடும். எனவே எந்த உணவுப் பொருள் கொடுத்தாலும் சாப்பிட்ட பிறகு குழந்தையின் வாயை நன்றாக கழுவுவது நல்லது. நொறுக்குத் தீனி சாப்பிடும் குழந்தைகள் தான் அதிக அளவில் பற்களை இழந்து தவிப்பதாக புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனவே குழந்தைகளுக்கு நொறுக்கு தீனியை ஆசை, ஆசையாக வாங்கித் தரும் பெற்றோர், சாப்பிட்டு முடிந்ததும் குழந்தையின் வாய்க்குள் தண்ணீர் விட்டு கழுவி விடுவது நல்லது.

பல் துலக்கும் முறை...........

குழந்தைக்கு 1 வயதானதும் பிரஷ் மூலம் பல் துலக்க தொடங்கி விடலாம். இதன் மூலம் அவர்களது பல்லில் உள்ள கிருமிகள் ஒழிக்கப்பட்டு, வாய் பகுதியும் சுத்தமானதாக இருக்கும். குழந்தைகளுக்கு பொம்மை வடிவில் விதவிதமான மாடல்களில் `பிரஷ்' வந்துள்ளன. குழந்தைகளுக்கான டூத் பேஸ்ட்டை மட்டுமே பயன்படுத்தி பல் துலக்குவது நல்லது.

காலையிலும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். 2 முதல் 3 நிமிடம் பல் துலக்கினால் போதும், 3 மாதத்திற்கு ஒரு முறை பிரஷ்ஷை மாற்றுவது நல்லது. பட்டாணி அளவுக்கு `டூத் பேஸ்ட்' பயன்படுத்தினால் போதும். 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மவுத்வாஷ் பயன்படுத்த கூடாது. 6 மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவ நிபுணரிடம் சென்று பற்களை சோதனை செய்து கொள்வது நல்லது.

பல் சீரமைப்பு........

பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்குக் காரணம் குழந்தை சிறு வயதில் உள்ளபோது விரல் சூப்புவதாலும், பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நாக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும் வாய் திறந்தே தூங்குவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பாற்பல் விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

பொதுவாக கிளிப்புகள் மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்திற்குத் தள்ளப்படுவதால் பல்வரிசை சீராக அமையும்.

பரிசோதனை அவசியம்......

குழந்தைகள் சீக்கிரம் வளர்ச்சியடைவது போலவே பற்களும் அதிவேகத்தில் வளரும், ஒவ்வொரு மாதமும் உங்கள் குழந்தையின் பற்கள் சரியான விதத்தில் வளருகிறதா என்று பரிசோதித்து பார்க்கவும், பற்சிதைவு பெரும்பாலும் ஈறுகளை ஒட்டியவாறு முன்பற்கள், அல்லது பின்பற்களில் தான் ஏற்படுகிறது.

வித்தியாசமான வெள்ளை நிறமோ, அல்லது பிரவுன் நிறமோ பற்களால் அல்லது ஈறுகளில் தென்பட்டால் உங்கள் பல் மருத்துவரை உடனடியாக அணுகவும். குழந்தைக்கு ஒரு வயது நிறைவு பெறும் போதே பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளவும், இதற்கு முன்பே பற்களில் ஏதும் பிரச்சினைகள் தென்பட்டால் அப்போதே மருத்துவரிடம் காட்டி தெளிவு படுத்திக்கொள்ளவும்.

மருத்துவ பரிசோதனைகளின் போது, ஒவ்வொரு முறை பல் மருத்துவரிடம் செல்லும் போதும், பற்கள், பல் வரிசை, அமைப்பு சரியான படி வளர்ந்திருக்கிறதா என்று உறுதிபடுத்திக் கொள்ளவும். பற்சிதைவு இருக்கிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ளவும். தினசரி பல் தேய்க்கும் முறைகள், மற்றும் டூத் பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றைப் பற்றி மருத்துவரிடம் பேசவும்.

பெண் கர்ப்பமாக இருக்கும் போதே தனது வாயை பல் மருத்துவரிடம் சென்று சுத்தப்படுத்தி, கிருமிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உணவு முறை........

பாட்டில் பால்,பார்டுலா பால் வகைகள் கொடுப்பதாக இருந்தால், கொடுத்து முடிந்ததும், ஒன்றிரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் கொடுக்கவும். ஸ்நாக்ஸ் சாப்பிடும் வயது வந்ததும், சீஸ், பழங்கள், மற்றும் காய்கறிகள் போன்ற உணவு வகைகளும் மென்று சாப்பிடக்கூடிய வகைகளையும் தேர்ந்தெடுக்கவும்.

பாட்டிலில் அடைக் கப்பட்ட ஜுஸ் வகைகள், மிட்டாய்கள், கர்போனேட்டட் பானங்கள் முற்றிலும் தவிர்க்கவும், ஜவ்வு போன்ற உணவுகளை (சுயிங்கம் போன்ற) மற்றும் உறிஞ்சி குடிக்கக் கூடிய பானங்கள் ஆகியவை இள வயதினருக்கு, பல் இன்னும் முழுமையாக உருவாகாமல் இருப்பதால், பற்சிதைவு ஏற்படலாம். சர்க்கரை சேர்க்காத, இனிப்பூட்டப்படாத பானங்கள், ஜுஸ் மற்றும் தண்ணீர் மட்டும் அடிக்கடி கொடுக்கவும்.

பற்களைப் பாதுகாக்க.........

உணவை சாப்பிட்டபின் வாயை சுத்தமாக கழுவாவிடின் பற்களில் பூச்சி விழுந்து சொத்தையாகிறது. சாதாரணமாக நமது உடலில் ஒரு சதுர மீட்டர் தோலில் வலியை உணர்த்தும் செல் 200 தான் இருக்கும். ஆனால் பல்லில் 15 ஆயிரம் செல் முதல் 30 ஆயிரம் செல்கள் வரை உள்ளன. பல்லும் ஈறும் சேரும் இடத்தில் 75 ஆயிரம் செல்கள் உள்ளன.

எனவே தான் பல்வலி அதிக வலியை கொடுக்கிறது. உடலில் மற்ற உறுப்புக்களில் ஏற்படும் வலியை தாங்கிக் கொள்ளமுடியும். ஆனால் பல்வலி ஏற்பட்டால் தாங்க முடியாது. இதற்கு காரணம் அந்த வலி மூளையையும், கண்களையும் தாக்குவதனால் தான். பல்வலியை தடுக்க வேண்டுமாயின் விட்டமின் ஏ.சி.டி. கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

தினசரி 16 அவுன்ஸ் பாலின் அளவு சேர்க்க வேண்டும். அதிக புளிப்பு அதிக இனிப்பு மிதமிஞ்சிய சூடான பாதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. கரி சாம்பல் மணல் போன்றவற்றால் பல் துலக்ககூடாது என்கிறார் சென்னை தியாகராய நகரில் உள்ள கண்மணி பல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சரவணகுமார்.

No comments:

Post a Comment

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத் தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க ம...